05 May 2009

நடைபிணமாக ஈழக் குழந்தைகள்!

நடைபிணமாக ஈழக் குழந்தைகள்!

''ஆமி மாமா.. சோறு போடுங்க...''

ன்னங்கள் வற்றிப்போய் எலும்பும் தோலுமான அந்தக் குழந்தைகள் செய்த ஒரே தவறு... தமிழ் வயிற்றில் தரித்தது தான்! சோமாலியக் குழந்தைகளை விட மோசமாக வயிறு ஒட்டிப்போய்க் கிடக்கும் ஈழத் தமிழ்க் குழந்தைகள் இன்று சாவின் நுனியில் தத்தளித்துக் கொண்டிருக்கின்றன.

தாய்-தந்தை உறவுகளைப் பிரிந்த ஓலங்கள்... உறவுகளைப் பற்றி நினைக்கக்கூட சுவாதீனமில்லாமல் வயிற்றைத் தடவும் பசிக் குரல்கள்... எங்கே போவதெனத் தெரியாமல் பிரமை பிடித்து அலையும் பரிதாபங்கள்... என ஈழம், இன்று மரணக் கேணி ஆகியிருக்கிறது.

பன்னாட்டு அமைதி அமைப்புகளும் ஈழத்தில் குழந்தைகள் மீது நடத்தப்படும் வன்கொடூரத்தை பகிரங்கமாகக் கண்டித்திருக்கின்றன. ஆனால், சிங்கள ராணுவத்தின் வெறிகொண்ட கொடூரத் தாக்கு தல் சத்தங்களில் அந்தக் குரல்கள் இலங்கை அரசுக்கு கேட்பதே இல்லை!

வவுனியாவில் இருக்கும் சுகாதாரத் துறை ஊழியர் ஒருவர் பேசும்போது,

''ராணுவக் கட்டுப்பாட்டுப் பகுதியில் தங்கி இருக்கும் குழந்தைகளில் முக்கால்வாசி


பேருக்குக் காது மந்தமாகி விட்டது. தொடர்ந்து ஒலிக்கும் சிங்கள ராணுவ பீரங்கிகளின் கொடும் சத்தம், அவர்களின் செவிப் பறையைப் புண்ணாக்கி விட்டது. மனரீதியாகவும் அந்தக் குழந்தைகள் பெரிய அளவில் பாதிக்கப் பட்டிருக்கின்றன.

ராணுவக் கட்டுப் பாட்டுப் பகுதிக்கு மக்கள் கொண்டு வரப்பட்டதுமே உடனடியாக குழந்தை கள் தனியாகவும், பெற்றோர்கள் தனித் தனியாகவும் பிரிக்கப்படுகிறார்கள். பெற்றோரை விட்டுப் பிரிக்கப்படும்போது குழந்தைகள் கதறும் கூக்குரலை, மனசாட்சி யுள்ள ராணுவத்தினர் சிலராலேயே பொறுத்துக்கொள்ள முடியவில்லை. தனித் தனியாகப் பிரிப்பதன் மூலம் குழந்தை களைத் தனிமைப்படுத்தும் சிங்கள ராணுவம், அவர்களை கம்பி வேலியிட்ட மைதானத்தில் அடைத்து வைத்திருக்கிறது. நிழலுக்குக் கூட வழியில்லாமல் அல்லாடும் அந்தக் குழந்தை களுக்கு, ஒரு நாளைக்கு ஒரு தடவைதான் உணவு.

கடந்த வாரம் பத்து வயதுச் சிறுவர்கள் இருவர் கம்பி வேலியை வளைத்துத் தப்பிக்க முயன்றபோது, ராணுவத்தினரிடம் பிடிபட் டனர். மொத்தக் குழந்தைகளும் பார்க்க... அந்தச் சிறுவர்கள் மீது நடத்தப்பட்ட வெறித்தனமான அடி, எல்லோரையும் உலுக்கி விட்டது. ராணுவத்தின் தாக்குதலில் காயமடைந்த குழந்தைகள், மருந்துக்கு வழியில்லாமல் வெயிலில் எரிச்சல் தாளாமல் துடிதுடித்துப் போகிறார்கள். மதிய வேளைகளில் ராணு வத்தினர் வரும்போது, 'ஆமி மாமா, சோறு போடுங்க...' என முகாம் குழந்தைகள் பசி மயக்கத்தோடு ஈனஸ்வரத்தில் கெஞ்சுவதைப் பார்க்கையிலேயே நெஞ்சடைத்து விடும்! பாவம், பசித்த வயிற்றுப் பிஞ்சுகளுக்கு, எமன்களை உறவுகொண்டாடுகிறோம் என எப்படித் தெரியும்? அதிலும் சில குழந்தைகள், கொடுக்கப்படும் ஒருவேளை சாப்பாட்டையும் கூட வற்புறுத்திக் கொடுத்தாலும், சாப்பிடாமல் பித்துப் பிடித்துத் திரிகின்றன. கொஞ்சம் விவரமான குழந்தைகளைத் தனியே அழைத்துச் செல்லும் ராணுவத்தினர், அவர்களை என்ன செய்கிறார்கள் என்றே தெரிவதில்லை!

அண்ணன்-தம்பி, அக்கா-தங்கை என உறவு வழியிலான குழந்தைகளும் கூட அங்கே நெருங்க விடாமல் கெடுபிடி காட்டப்படுகிறது. ராணுவத்தின் நடவடிக் கைகளை ஆழமாகக் கவனித்தால்... 'இந்தக் குழந்தைகளை மனரீதியாக சிதைத்து பலவீனப்படுத்த வேண்டும்' என்கிற வெறி அப்பட்டமாகத் தெரிகிறது. வவுனியா மாவட்ட கலெக்டரான மிஸஸ் சார்லஸ், இந்த உண்மைகளை உலக அமைப்புகளின் கவனத்துக்குக் கொண்டு சென்றிருக்கிறார். பத்துக்கும் மேற்பட்ட ராணுவக் கட்டுப்பாட்டுப் பகுதிகளில் உள்ள ஈழக் குழந்தைகளுக்கு தொடர்ந்து இத்தகைய கதிதான்!'' என்கிறார் வேதனை மேலிட.

தாக்குதலுக்கு ஆளாகிக் கிடக்கும் குழந்தைகள் குறித்து வருகிற செய்திகளோ, இதைவிடக் கொடூரம்..!

''கடந்த இரண்டு மாதங்களில் மட்டுமே பத்து வயதுக்கு உட்பட்ட நாலாயிரத்துக்கும் மேலான குழந்தைகள் போரில் இறந்திருக்கின்றன! மூவாயிரத் துக்கும் மேற்பட்ட குழந்தைகள், கை-கால்களை இழந்து பெருங்காயங்களோடு அல்லாடிக் கொண்டிருக்கின்றன. ரத்தத் தொற்று வியாதிகள் பரவி, நிறையக் குழந்தைகள் படுத்த படுக்கையாகி, எப்போது மரணம் சூழுமோ என்ற நிலையில் கிடக்கின்றன. 12 வயதுக்கு மேற் பட்ட ஆண் குழந்தைகள் ராணுவத்தினரால் தேடித்தேடி அழிக்கப்படுகின்றன. 'எதிர்காலத்தில் யாரும் போராளியாக உருவெடுத்துவிடக் கூடாது!' என்பதற்காகத்தான் இப்படி திட்டமிட்டுச் செய்கிறது ராணுவம். சிங்களர்களின் அந்தரங்க சொர்க்க புரியாக அரசாலேயே அறிவிக்கப்பட்டிருக்கும் அனுராதபுரத்தில், இது நாள் வரை தமிழ் பெண்கள் விபசாரத்தில் ஈடுபட்டதாகத் தகவல்கள் இல்லை. ஆனால், இப்போது ஈழத்தில் இருந்து பிடிக்கப்பட்ட பதின்மூன்று வயதுப் பெண் குழந்தைகள் பலர், அங்கே விபசார வற்புறுத்தலுக்கு ஆளாக்கப்பட்டிருக்கிறார்கள். அதில் ஒரு சிறுமி, ராணுவத்தினர் தன் மீது கட்டவிழ்த்துவிட்ட காமக் கொடூரங் களையும், வெறித்தனங்களையும் ஒரு கடிதமாக எழுதி வைத்துவிட்டு, இரு வாரங்களுக்கு முன்பு தற்கொலை செய்து கொண்டாள்.

தற்போது முள்ளிவாய்க்கால், இரட்டை வாய்க்கால், சாளம்பன், ஒற்றைப் பனையடி ஆகிய பகுதிகளில் மட்டும் குறைந்தது இரண்டாயிரத்துக்கும் அதிகமான குழந்தைகள் இருக்கிறார்கள். 'கனரக ஆயுதங்களைப் பயன்படுத்த மாட்டோம்!' என உலகை ஏமாற்றி, பீரங்கித் தாக்குதலை வெறிகொண்டு நடத்திக் கொண்டிருக்கும் ராணுவம், மீதமிருக்கும் குழந்தைகளைக் கொல்ல வேண்டிய அவசியமே இல்லை! நாள் ஒன்றுக்கு ஆறாயிரத்துக்கும் அதிகமான அளவில் அங்கே வந்துவிழும் குண்டுகளும், அதன் பெருஞ்சத்தமும், அதிர்வும் மிச்சமிருக்கும் குழந்தைகளை நடைபிணமாக்கி விட்டன. குண்டு விழும் சத்தம் கேட்டால் கூட இங்கிருக்கும் குழந்தைகள் தப்பி ஓட நினைப்பதில்லை. என்ன நடக்கிறதென்றே தெரியாமல், வெறித்தபடி பித்துப்பிடித்த மனநிலையில் அலைந்து கொண்டிருக்கிறார்கள் அவர்கள்..!'' என்கிறார்கள் வன்னிப் பிரதேச தமிழ்ப் பிரதிநிதிகள்.

அடுத்த தலைமுறைப் பிஞ்சுகளும் எங்கே உரிமைக் காகப் போராட கிளம்பி விடுமோ என்ற பயத்தில் சிங்கள ராணுவம் நடத்துவது, 'இனப் படுகொலை' மட்டுமல்ல... 'ஈனத்தனமான படுகொலை'யும் கூட!

- இரா.சரவணன்

Courtesy: vikatan

ராஜபக்ஷேவின் அடுத்த திட்டம்...

ராஜபக்ஷேவின் அடுத்த திட்டம்...
- ப.திருமாவேலன்


''இரண்டே நாட்களில் 3 ஆயிரம் தமிழர்களைக் கொன்றிருக்கிறீர்கள்?'' என்று தமிழ் எம்.பி. இலங்கை நாடாளுமன்றத்தில் பகிரங்கமாகக் குற்றம் சாட்டுகிறார். ''உறுப்பினர், சபையில் தவறான தகவலைத் தருகிறார். 3,000 பேர் இறந்ததை அவர் போய்ப் பார்த்தாரா?'' என்று அமைச்சர் கேட்கிறார். சிங்கள எம்.பி-க்கள் சிரிக் கிறார்கள்.

எழுகிறார் இன்னொரு தமிழ் எம்.பி, ''பாதுகாப்பு வளையத்தில் இருக்கும் மக்களைக் குறி பார்த்துக் கொல்கிறது சிங்கள ராணுவம்'' என்று பதறுகிறார். உடன் எழும் இன்னொரு அமைச்சர், ''பதுங்கு குழியில் இருக்கும் பிரபாகரன் உங்களுக்கு இதைச் சொன்னாரா?'' என்று கேட்டதும், சபையில் பலத்த கைத்தட்டல். தமிழர்களின் ரத்தத்தைக் குற்றாலச் சாரலாகக் குளித்து மகிழும் சிங்கள இனவாத அரசின் ஆளுமையில் சிக்கித் தவிக்கும் சொந்தங்களைக் காப்பாற்ற எதுவும் நடக்க வில்லை.

இந்த ஆண்டு விடியும்போது தொடங்கி, கடந்த வாரம் வரை மட்டும் 4 ஆயிரத்து 795 தமிழர்கள் கொல்லப்பட்டுள்ளார்கள். நடுக்காட்டில், நட்ட நடு ரோட்டில் காயத்துடன் பெரும் அலறலுடன் கிடக்கிறான் தமிழன். சத்துக்கேற்ப மூன்று அல்லது நான்கு நாட்கள் கத்திக்கொண்டே கிடக்கும் உயிர்ச்சடலங்களைக் காப்பாற்ற ஐ.நா-வும் இல்லை. செஞ்சிலுவையும் இல்லை. அவர்கள் கும்பிடும் கடவுளும் இல்லை.

முல்லைத்தீவு காட்டு மரங்களுக்குள் டென்ட் பரப்பி, கையிருப்பில் இருக்கும் அரிசியைக் காய்ச்சிக் குடித்த வாழ்க்கையாவது நிரந்தரமானதாக இருந்தால் பரவாயில்லை என்று நினைத்தார்கள் மக்கள். ஆனால், அவர்களைக் கடந்த 4, 5 தேதிகளில் ரசயான வெடிகுண்டுகளை வீசி சின்னாபின்னப்படுத்தியிருக்கிறார்கள். அன்று மட்டும் 2,000 பேர் இறக்க... வெளியில் ஓடிவந்தார்கள் மக்கள். சுமார் 60,000 பேர் வந்திருப்பதாகச் சொல்கிறார் அமைச்சர். மொத்தம் இருந்தது 3 லட்சம் பேர். வெளியில் வந்தவர்களில் வயதுக்கு வந்த பெண்கள் மட்டும் சுமார் 600 பேர் தனி யாகப் பிரிக்கப்பட்டு, அனுராதபுரம் பகுதிக்கு அழைத் துச் செல்லப்பட்டுள்ளனராம். இளைஞர்கள் ஆயிரம் பேர் கொழும்புக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளனர். இவர்களது கதி என்ன என்பது அனைவருக்கும் தெரியும். சிங்களத்தில் தேசியத் தொழிலாக இப்போது மாறிவிட்ட கொலையும், கற்பழிப்பும்தான்!

''எங்களோட டென்ட்டை விட்டு மூன்று நாளுக்கு முன்னாடி இங்க வந்தோம். கட்டியிருந்த பாவாடை சட்டையோடு தண்ணிக்குள் நீந்தி வந்தேன். மாற்றுத் துணியில்லை. அங்கயே குண்டு சத்தம் இருந்ததால ரெண்டு நாளா பங்கருக்குள் இருந்தோம். அதனால சாப்பிடலை. இங்க வந்து மூணு நாளாச்சி. சாப்பிட எதுவும் தரல. குடிக்கத் தண்ணி இல்ல. சேறும் சகதியுமான துணியோடுதான் இங்கே இருக்கேன். எங்க அப்பா, அம்மா எங்க இருக்காங்கன்னு தெரியல!'' என்று ஒரு பெண் வாய்க்குள் முனகுகிறார். 40 வயது இருக்கும் அவருக்கு. 'எவ்வளவு தூரம் நடந்து வந்தீர்கள்?' என்று நிருபர் கேட்கிறார். இது அவரது காதுக்குக் கேட்கவில்லை. அடைத்துவிட்டது காது. கண்ணில் மேல் இமை எழும்ப நினைக்கிறது. முடியவில்லை. உதட்டுக்கு வெளியே நாக்கைக் கொண்டுவந்து ஈரப்படுத்த முயற்சிக்கிறார். நாவிலும் ஈரம் இல்லை. கையில், காலில் காயங்கள் இல்லை. ஆனாலும், அவரால் அசைய முடியவில்லை. இவரைப் போலத்தான் ஆயிரக்கணக்கான மக்கள் கொட்டடியில் கிடக்கிறார்கள்.

யார் சொன்னாலும் கேட்கும் நிலையில் இல்லை இலங்கை அரசாங்கம். ஐ.நா., அமெரிக்காவில் தொடங்கி... இந்தியா, சீனா தவிர, அனைத்து நாடுகளும் கடுங் கண்டனம் செலுத்திய பிறகும் ராஜபக்ஷே நிறுத்துவதாக இல்லை. ஜெயவர்த்தனா காலத்தைவிடக் கோரமான நிலை என்கிறார்கள் இலங்கைப் பத்திரிகையாளர் களே!

''எங்கள் நாடு ராணுவமயமாகிக்கொண்டு வருகிறது. ஜனநாயகம், குடியாட்சி நெறிமுறைகள் அனைத்தையும் நொறுக்கிவிட்டார் ராஜபக்ஷே. தமிழர்கள் அனைவரையும் கொன்றுவிட்டு, சிங்கள தேசமாக இலங்கையை அறிவிக்கத் திட்டமிடுகிறார். இதற்கு எதிராக இருக்கும் சிங்கள சக்திகளையும் நசுக்க ஆரம்பித்துவிட்டார். ஒரே ஒரு உதாரணம், யாரெல்லாம் அவரது ஆட்சி அமைக்க உதவினார்களோ, அவர்கள் அனைவரையும் ஒழித்துவிட்டார். மகிந்தா ஆட்சி அமைக்க ஜனதா விமுக்தி பெரமுனா உதவி செய்தது. அந்தக் கட்சியை இரண்டாக உடைத்தார். அவரை அரசியலுக்குக் கொண்டுவந்த சந்திரிகா குடியிருக்க அரசாங்க வீடுகூட இவர் தரவில்லை. தனது நண்பனான மங்கள சமரவீராவை நாட்டை விட்டு விரட்டினார். மகிந்தாவின் அரசாங்கத்தை உருவாக்க உழைத்த ஸ்ரீபதி சூரியாச்சியையே கைது செய்து விலங்கு போட்டார். பண்டாரநாயகா வம்சத்தினர் யாரும் அரசாங்கத்தில் இல்லாமல் பார்த்துக்கொண்டார். அதாவது உடனிருந்து உருவாக்கியவர்கள் யாரும் இல்லை.

இப்போது இருப்பதெல்லாம் அவரது தம்பிகள், குடும்பத்தினர் மட்டும்தான். யாரெல்லாம் இவருக்கு எதிராக இருந்தார்களோ அவர்கள்தான் இப்போது உடன் இருக்கிறார்கள். கோத்தபய ராஜபக்ஷே, சரத் ஃபொன்சேகா என இருவரும் அமெரிக்க பிரஜைகள். மகிந்தாவைச் சுற்றியிருக்கும் இன்னும் முக்கியமான நான்கு பேரும் வெளிநாட்டுப் பிரஜைகள். இவர்களை வைத்து சிங்கள பேரினவாத ஆட்சியை அமைப்பதுதான் மகிந்தாவின் திட்டம்'' என்று அங்குள்ள பத்திரிகையாளர்கள் சொல் கிறார்கள்.

'இலங்கை செய்யும் அனைத்துக் காரியங்களுக்கும் எங்களது ஆதரவுள்ளது' என்று சீனா அறிவித்திருப்பதற்கும், ஐ.நா-வில் தனது அதிகாரத்தைப் பயன்படுத்தி, இலங்கைக்கு எதிரான நடவடிக்கையை அது தடுத்ததற்குமான பின்னணி இந்தியாவுக்கு எதிரானது. எதிர்காலத்தில் ஒரு பேரழிவை இந்தியாவுக்கும் சேர்த்து செய்ய ஆரம்பித்திருக்கிறார் மகிந்தா ராஜபக்ஷே. அதன் விளைவுகள் சில லட்சம் தமிழர்களை மட்டுமல்ல, பல கோடி இந்தியர்களையும் பாதிக்கும் நாள் நெருங்கிக்கொண்டு இருக்கிறது!


courtesy: vikatan