21 April 2009

சரணடையமாட்டோம்-தொடர்ந்து போர் புரிவோம்

நாங்கள் சரணடையமாட்டோம்-தொடர்ந்து போர் புரிவோம்: விடுதலைப்புலிகள்

தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிரான இறுதிக்கட்டத் தாக்குதலைத் தொடுத்திருப்பதாக சிறிலங்கா படையினர் அறிவித்திருக்கும் அதேவேளையில், தாம் ஒருபோதும் சரணடையப்போவதில்லை என தமிழீழ விடுதலைப் புலிகளின் சமாதான செயலகத்தின் பணிப்பாளர் சீவரட்ணம் புலித்தேவன் தெரிவித்திருக்கின்றார்.
அனைத்துலக செய்தி நிறுவமான ரொய்ட்டருக்கு அளித்துள்ள பேட்டி ஒன்றில் இதனைத் தெரிவித்துள்ள புலித்தேவன், "நிரந்தரமான போர் நிறுத்தம் ஒன்றை ஏற்படுத்துவதற்கு அனைத்துலக சமூகம் உடனடியாகத் தலையிட்டு அதற்கான அழுத்தத்தைக் கொடுக்க வேண்டும்" எனவும் கோரியிருக்கின்றார்.
"நாம் ஒருபோதும் சரணடையப் போவதில்லை. நாம் தொடர்ந்தும் போர் புரிவோம். தமிழ் மக்களின் ஆதரவுடன் இந்தப் போரில் வெற்றிபெற முடியும் என்ற நம்பிக்கை எமக்கு இருக்கின்றது" எனத் தெரிவித்த புலித்தேவன், முல்லைத்தீவின் கடற்கரைப் பகுதியில் உள்ள பாதுகாப்பு வலயப் பகுதியின் எல்லைக்கு அருகாமையில் தான் இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனும் தம்முடனேயே இருப்பதாகவும் குறிப்பிட்ட புலித்தேவன், சிறிலங்கா ஆயுதப் படைகளுக்கு எதிரான போரை அவரே நெறிப்படுத்தி வருவதாகவும், மக்களுக்கு ஆதரவையும் உதவிகளையும் அவர் வழங்கி வருவதாகவும் தெரிவித்தார்.
தமிழ் மக்களை படையினர் மனிதக் கேடயங்களாகப் பயன்படுத்துவதாகக் குற்றம்சாட்டிய புலித்தேவன், "நேரம் வேகமாகச் சென்றுகொண்டிருக்கின்றது. இரத்தக்களரி ஒன்று இடம்பெறவிருப்பதால் அனைத்துலக சமூகம் இந்த விசயத்தில் தலையிட வேண்டும்" எனவும் கோரிக்கை விடுத்திருக்கின்றார்.
சிங்களப்படைகள் திங்கட்கிழமை மேற்கொண்ட எறிகணைத் தாக்குதலில் ஆயிரத்துக்கும் அதிகமானவர்கள் கொல்லப்பட்டும் 2 ஆயிரத்துக்கும் அதிகமானவர்கள் படுகாயமடைந்துமிருப்பதாகவும் புலித்தேவன் தெரிவித்துள்ளார்.
"பொதுமக்கள் எமக்கு முழுமையான ஆதரவை வழங்கி வருவதுடன், எம்முடன் இணைந்தும் போராடுகின்றனர். ஏனென்றால் விடுதலைப் புலிகள் அமைப்பு அந்த மக்களுக்காகத்தான் போராடுகின்றது" எனவும் தெரிவித்த புலித்தேவன், "அதனால்தான் அவர்கள் சுயவிருப்புடன் எமது அமைப்பில் இணைந்து போராடுகின்றனர்" எனவும் சுட்டிக்காட்டியுள்ளார்.

courtesy: nakeeran

இலங்கையில் இரத்த ஆறு

இலங்கையில் இரத்த ஆறு ஓடுவதைத் தடுத்து நிறுத்த ஒரு சில மணி நேரமே உள்ளது

வன்னியில் இரத்த ஆறு ஒன்று ஓடுவதைத் தடுத்து நிறுத்துவதற்கு உலகத்துக்கு ஒரு சில மணி நேரம் மட்டுமே உள்ளது என மனித உரிமைகள் காப்பகம் அவசரக் கோரிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
விடுதலைப் புலிகள் அமைப்பைச் சேர்ந்தவர்கள் இன்று செவ்வாய்கிழமை நண்பகலுக்கு முன்னர் சரணடைந்துவிட வேண்டும் என இலங்கை அதிபர் மகிந்த ராஜபக்ச அறிவித்திருக்கும் நிலையிலேயே இந்த அச்சத்தை மனித உரிமைகள் காப்பகம் வெளியிட்டுள்ளது.
விடுதலைப் புலிகள் சரணடையாவிட்டால் தான் செய்யப்போவது என்ன என்பதை மகிந்த அறிவிக்கா போதிலும், "ஒரு இரத்த ஆறு ஓடலாம் என நாம் கவலையடைந்திக்கின்றோம்" என நியூயார்க்கை தளமாகக் கொண்டுள்ள மனித உரிமைகள் காப்பகத்தின் மூத்த ஆய்வாளரான அனா நிஸ்டால் தெரிவித்திருக்கின்றார்.
இந்தப் பிரச்சினையில் சம்பந்தப்பட்ட விடுதலைப் புலிகளுக்கும், இலங்கை அரசாங்கத்துக்கும் இந்த நிலை தொடரக்கூடாது என உணர்த்துவதற்கு அனைத்துலக சமூகத்துக்கு சில மணி நேரமே உள்ளது என அவர் வாசிங்டனில் உள்ள புரூக்கிங்க்ஸ் நிலையத்தில் நிகழ்த்திய உரை ஒன்றில் தெரிவித்திருக்கின்றார்.
"தேவையற்ற மற்றும் சட்டவிரோதமான முறையில் பொதுமக்களைப் படுகொலை செய்வது போர்க் குற்றங்களாகக் கருதப்படும் என்பதையும், இவற்றில் சம்பந்தப்பட்டவர்கள், தளபதிகள் உட்பட அனைவரும் இதற்குப் பொறுப்பேற்க வேண்டும் என்பதை அனைத்துலகம் அவர்களுக்கு உணர்த்த வேண்டும்" எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.

courtesy: nakeeran

சிங்களப்படையிடமிருந்து தமிழர்களை காப்பாற்றுங்கள்:விடுதலைப்புலிகள் வேண்டுகோள்

சிங்களப்படையிடமிருந்து தமிழர்களை காப்பாற்றுங்கள்:விடுதலைப்புலிகள் வேண்டுகோள்
வன்னியின் முல்லைத்தீவு மாவட்ட பகுதியில் உருவாகியுள்ள வார்த்தைகளால் வெளிப்படுத்த முடியாத நிலைமைகள் தொடர்பாக ஐக்கிய நாடுகள் சபையும் அனைத்துலக சமூகமும் தமது கவனத்தைச் செலுத்த வேண்டும் என தமிழீழ விடுதலைப் புலிகள் அவசர கோரிக்கையினை விடுத்துள்ளனர்.
இது தொடர்பாக தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல் பிரிவு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கையில்,
"கடந்த 48 மணி நேரத்தில் சிறிலங்காவின் ஆயுதப்படைகள் தமிழ் மக்களை மனித கேடயங்களாகப் பயன்படுத்தி புதுமாத்தளன், வலைஞர்மடம் ஆகிய இரு முன்னணி நிலைகள் வழியாகவும் உள்ளே புகுந்துள்ளனர்.
தமிழ் மக்களை மனித கேடயங்களாகப் பயன்படுத்துவதன் மூலமாக விடுதலைப் புலிகளின் எதிர்ப்பைப் பலவீனப்படுத்துவதற்கு சிறிலங்கா ஆயுதப்படையினர் முயற்சித்துள்ளனர்.
அதேவேளையில் முன்னணிப் பகுதிகளில் உள்ள கண்ணிவெடிகளை அகற்றுவதற்கும் இந்தப் பொதுமக்களையே படையினர் பயன்படுத்தியிருக்கின்றனர்.
இதனை எதிர்க்க முனைந்தவர்கள் உட்பட நூற்றுக்கணக்கான பொதுமக்கள் இந்த நடவடிக்கைகளின் போது சிறிலங்கா படையினரால் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளனர் என தொடக்க கட்டத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
நேற்று (20.04.09) ஆயிரத்துக்கும் அதிகமான பொதுமக்கள் கொல்லப்பட்டும் சுமார் 2 ஆயிரத்து 300 வரையிலானவர்கள் காயமடைந்தும் உள்ளனர். இன்றும் இந்த நிலை தொடர்கின்றது.
படுகாயமடைந்து ஆபத்தான நிலைமையில் உள்ள 2 ஆயிரம் மக்களைப் பாதுகாக்கும் வகையில் அவர்களுக்கான மருத்துவ உதவிகளை வழங்குமாறும் கப்பல் மூலமாக அவர்களை வெளியேற்றுவதற்கான நடவடிக்கைகளை எடுக்குமாறும் அனைத்துலக செஞ்சிலுவைச் சங்கத்தினை விடுதலைப் புலிகள் அமைப்பு கேட்டுக்கொண்டுள்ளது.
பெருந்தொகையானவர்கள் பட்டினிச் சாவை எதிர்கொண்டிருப்பதால் உடனடியாக உணவு விநியோகம் மேற்கொள்ளப்படுவதும் அவசியமானதாகியுள்ளது.
புதுமாத்தளன் தற்போது இராணுவ ஆக்கிரமிப்புக்குள் வந்துவிட்டதால் புதிய தளம் ஒன்றில் அனைத்துலக செஞ்சிலுவைச் சங்க கப்பல்கள் வந்து செல்வதற்குத் தேவையான ஒத்துழைப்பை விடுதலைப் புலிகள் அமைப்பு வழங்கியுள்ளது.
மக்களைக் கேடயங்களாகப் பயன்படுத்தி இராணுவ நடவடிக்கைகளை மேற்கொள்வது மற்றும் கண்ணிவெடிகளை அகற்றுவதற்கு மக்களைப் பயன்படுத்துவதும் கடுமையான போர்க் குற்றங்கள் என்பதுடன், இந்த மனிதப் படுகொலைக்குக் சிறிலங்கா அரசாங்கமும், ஆயுதப் படைகளின் தளபதிகளுமே நேரடியாகப் பொறுப்பேற்க வேண்டியவர்களாகும்.
இந்த போருக்குள் அகப்பட்டுள்ள தமிழ்ப் பொதுமக்களை மீட்பதற்கு விரைந்து செயற்பட வேண்டும் என ஐ.நா. உட்பட அனைத்துலக சமூகத்தை விடுதலைப் புலிகள் அமைப்பு கேட்டுக்கொள்கின்றது.
இந்தப் போர்க்குற்றங்கள் மிகவும் கடுமையானவை எனக்கருதும் விடுதலைப் புலிகள், இதனைத் தடுத்து நிறுத்துவதற்கு அவசரமான அனைத்துலக ரீதியான நடவடிக்கை அவசியம் எனவும் கருதுகின்றது.
கடுமையான போர்க்குற்றங்களை மக்கள் எதிர்கொண்டுள்ள நிலையில் இந்த தீவிரமான மனிதாபிமானப் பிரச்சினையை எதிர்கொள்ளத்தக்க விதமாகச் செயற்படுமாறும் கொழும்பில் உள்ள இராஜதந்திர சமூகத்தை விடுதலைப் புலிகள் அமைப்பு கேட்டுக்கொள்கின்றது’’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

courtesy: nakeeran